Wednesday, February 28, 2007

303. பாப்பாப்பட்டி விவகாரம்

தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நட்டார்மங்கலம் தொகுதிகளில், பஞ்சாயத்து தேர்தல் நல்லபடியாக நடைபெற்று, அங்கு தலித்துகள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டதை கொண்டாடும் விதமாக, திமுக அரசு, விழாவெல்லாம் எடுத்து அமர்க்களப்படுத்தியது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும் என்று எண்ணுகிறேன். தலித்துகளை தைரியமாக போட்டியிட முன்வர வைத்ததிலும், அத்தொகுதிகளில் உள்ள கள்ளர் இன மக்களிடம் பேசி ஒரு சுமுகமான சூழல் உண்டாக்கியதிலும், பல வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தத் தொடங்கியதிலும், மதுரை கலெக்டர் உதயசந்திரன் அவர்களுக்கு பெரும்பங்குண்டு என்பதை அனைவரும் அறிவர். இரு சமூகத்தினரிடம் நல்ல உறவு வைத்துள்ளவரும் கூட.

திடீரென்று அவருக்கு மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், மு.க.அழகிரியுடன் கலெக்டர் இணக்கமாக இருந்து செயல்பட மறுத்தது தான் என்று செய்தி !!! இதைத் தொடர்ந்து, அவர் விடுப்பில் சென்று விட்டார். பாப்பாப்பட்டியின் பிரெசிடெண்ட் பெரியகருப்பன், கலெக்டரின் மாற்றலை எதிர்த்து தான் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தார். கலெக்டரை மாற்றுவதால், வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் என்றும், சாதிப் பிரச்சினை மீண்டும் தீவிரமாகி தாங்கள் ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என்றும், மூன்று தலித் பஞ்சாயத்துத் தலைவர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

லோக்கல் திமுக தலைவர்கள், தலித் பஞ்சாயத்துத் தலைவர்களின் கையை முறுக்கி, அவர்களை புது கலெக்டரை சந்திக்க வைத்து, 'பிரச்சினை ஒன்றுமில்லை' என்று அறிவிக்கவும் செய்து விட்டனர். அரசியலில் இதெல்லாம் சகஜம் தான் என்றாலும், இந்த தொகுதிகளில் சாதிப்பூசல் கனன்று கொண்டு தான் உள்ளது என்பது தான் உண்மை. இத்தொகுதிகளில், இரட்டை டம்ளர் முறை இன்னும் நடைமுறையில் தான் உள்ளது. கடைகளில், தலித்துகள் சரிசமமாக அமர்ந்து தேநீரோ, உணவோ சாப்பிட முடியாத நிலை நிலவுகிறது. தலித் ஒருவரை பஞ்சாயத்துத் தலைவராக ஆக்கி விட்டால் மட்டும் போதுமா ???

அரசு இயந்திரத்தால் / சட்டத்தால் மட்டும், தலித்துக்களுக்கு எதிரான இந்த மனப்போக்கை மாற்ற முடியாது என்பது தெளிவு ! 'இரண்டாயிரம் வருடங்களாக' என்று அரைத்த மாவையே அரைக்காமல், ஒரு சமுதாயமாக / சமுதாயத்தில் ஒரு அங்கத்தினராக / ஒரு குடிமகனாக / ஒரு மனிதனாக, ஆக்கபூர்வமாக நாம் என்ன செய்ய முடியும் என்று சிந்திப்பது, செயல்படுவது மிகவும் அவசியமான ஒன்று என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 303 ***

Tuesday, February 27, 2007

302. பஸ் எரிப்பு.. தூக்கு தண்டனை.. அ·ப்சல் et al

செல்வி ஜெயலலிதாவை கைது செய்தபோது நடந்த தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் பலியான 3 அப்பாவி மாணவிகளின் குடும்பங்களின் விடா முயற்சியின் பலனாக, சம்பந்தப்பட்ட 3 முக்கிய (அதிமுக) குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டு, வழக்கின் முதல் கட்டம் முடிவுக்கு வந்துள்ளது. குற்றவாளிகள் இனி, உயர் மற்றும் உச்சநீதி மன்றங்களில் மேல் முறையீட்டுக்காகச் செல்லலாம். நாட்டை சீரழிக்கும் தீவிரவாதத்திற்கு துணை போனதற்காக, உச்சநீதி மன்றமே அ·ப்சலுக்கு தூக்கு தண்டனை வழங்கியபோது, வலைப்பதிவுலக அருந்ததி ராயின் சிஷ்யகோடிகள், அத்தீர்ப்புக்கு பயங்கர ஆட்சேபம் தெரிவித்து, கண்டனப் பதிவுகளை எழுதித் தள்ளினர். இப்போது மூச்சு பேச்சில்லாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.

அ·ப்சல் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததால் உயிரிழந்தவர்கள் மற்றும் பஸ் எரிப்பில் அநியாயமாக பலியான மாணவிகள் ஆகிய இரு தரப்பினருமே அப்பாவிகள் தாமே ! அ·ப்சல் 'காஷ்மீர் சுதந்திரப் போராட்ட வீரர்' என்பதால், அவருக்கும் காஷ்மீர் போலவே special status-ஆ ??? பஸ்ஸை எரித்த மூவரும், 'ஜெயலலிதா சுதந்திரப் போராட்ட வீரர்கள்' என்பதால், அவர்களை தூக்கிலிட்டால் OK-வா ??? பாராளுமன்றத்தைக் காக்கும் பொருட்டு உயிரிழந்த பாதுகாப்புப் படைவீரர்களின் உயிர் எவ்வகையில் குறைந்தது ? தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட, அதிமுக கட்சியைச் சேர்ந்த அம்மூவரும் உத்தமர்கள் என்று எதுவும் எழுத வரவில்லை. ஏன் இந்த selective amnesia என்று மட்டும் கேட்க விரும்புகிறேன்.

மரண தண்டனை எதிர்ப்பாளர்கள், பஸ் எரிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அதிகம் வாய் திறக்காமல் இருப்பதற்கு, அவர்கள் சிந்தனை ஓட்டத்தில் உள்ள போலித்தனம் தான் காரணம் என்று தோன்றுகிறது. மேலும், எதிர்ப்பதால் சாதகத்தை விட பாதகமே அதிகம் (மாணவிகளை உயிரோடு எரித்த குற்றவாளிகளுக்கு ஆதரவு தருவதால் ஏற்படும் விளைவுகளைச் சொல்கிறேன்!). ஆனால், அ·ப்சல் விவகாரத்தில், காஷ்மீர் பிரச்சினை, இந்திய ராணுவத்தின் மனித உரிமை அத்துமீறல்கள், இந்திய அரசின் அராஜகத்திற்கு எதிரான நிலைப்பாடு, பொதுப்புத்திக்கு அப்பால் சிந்திக்கும் இந்த மனித உரிமைக் காவலர்களின் 'தனித்துவமான சிறப்பு' ஆகியவை முன்னிறுத்தப்பட்டு, பிரகாசமான ஊடக வெளிச்சமும், அதனால் விளம்பரமும் கிடைத்து விடுகிறது.

ஒரு தீவிரவாதச் செயலால் (குண்டுவெடிப்பு) விளையும் உயிரிழப்பு ஏற்படுத்தும் உடனடி பாதிப்பு, அவ்வழக்கில் தீர்ப்பு வெளிவரும்போது இருப்பதில்லை. அதனால், ஊடகங்களில் அந்த உயிரிழப்புக்கு, அச்சமயத்தில் அவ்வளவு முக்கியத்துவமும் கிடைப்பதில்லை. இதனால் மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு சாதகமான சூழலும் அமைந்து விடுகிறது. ஆனால், பஸ் எரிப்பு விவகாரத்தில் நிலைமை அப்படியில்லை.

இந்த இரண்டு வழக்குகளுக்கும் மற்றொரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக எனக்குப் படுகிறது. தீவிரவாதிகளுக்கு துணை போன அ·ப்சலுக்கு (அவர் திட்டம் தீட்டாவிட்டாலும்), தீவிரவாதிகள் மேற்கொள்ளவிருந்த தாக்குதலின் வீரியமும், ஏற்படவிருந்த பாதிப்பும், பலர் உயிரிழக்கும் சாத்தியமும், செய்கையின் பயங்கரமும் தெரிந்தே இருந்தது ! ஆனால், தங்கள் தலைவிக்காக, தலைக்கேறிய ஆத்திரத்தில் பஸ் எரிப்பை முன் நின்று நடத்திய மூவரும், திட்டம் எதுவும் தீட்டி, அம்மாணவிகளைக் கொன்றதாகக் கூற முடியவில்லை ! பஸ்ஸில் இருந்தவர்கள் எதிர்க்கட்சிக்காரர்களும் அல்லர். மாணவிகளை எரித்துக் கொல்ல வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்திருக்க முடியாது என்று நம்ப வாய்ப்புள்ளது.

ஆர்ப்பாட்டங்களின்போது, பொதுச்சொத்துக்களுக்கு நாசம் விளைவிப்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். பொதுமக்களை பஸ்ஸை விட்டு இறங்கச் சொல்லி விட்டு பின் அதை நாசப்படுத்துவது தான் பெரும்பாலும் நடைபெறும். இந்த சம்பவத்தில், mob mentality-யின் தீவிரமும் அவசரமும் மூன்று இளந்தளிர்கள் கருகக் காரணமாகி விட்டன. இருந்தாலும், இம்மூவருக்கும் வழங்கப்பட்ட தண்டனை, இது போன்ற கொடுமைகள் மீண்டும் நிகழாமல் இருக்க ஒரு deterrent-ஆக இருக்கும் என்ற வகையிலும், முன்வைக்கப்பட்ட வாக்குவாதங்களையும் சாட்சியங்களையும் ஆய்ந்து நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பு என்ற வகையிலும், இந்தத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே.

என்றென்றும் அன்புடன்
பாலா

தொடர்புடைய சுட்டிகள்:

முகமூடி பதிவு

செல்வன் பதிவு


*** 302 ***

Monday, February 26, 2007

301. பாலாவைப் பற்றி "உலகப்புகழ்" இட்லிவடையார் !

என் இனிய தமிழ் மக்களே, ஆரிய / திராவிட உடன்பிறப்புகளே, :)
(அடிக்க வராதீங்க, ஸ்மைலி போட்டிருக்கேன் !)


இது என் வலைப்பதிவின் 301-வது பதிவு (300-வது பதிவாகத் தான் இதை இட இருந்தேன். பிரியதர்ஷினி என்ற குழந்தையின் மருத்துவச் செலவுக்கு உதவி கோரி ஒரு பதிவு அவசரமாக இட வேண்டியிருந்ததால், இட்லிவடையார் என்னை விமர்சிக்கும் இப்பதிவு 301 ஆகி விட்டது !)

சுருக்கமாக ஒரு பின்னணித் தகவல். நண்பர் பெனாத்தலாரின் ஆலோசனையின் பேரில், எனது வலைப்பதிவு குறித்து ஒரு விமர்சனம் எழுதித் தருமாறு, இட்லிவடையிடம் (அவரது ஒரு பதிவில் இட்ட பின்னூட்டம் வாயிலாக) வேண்டுகோள் வைத்தேன். முதலில், 'தமாஷ் பண்ணாதீர்கள்' என்ற அவர், பின்னர் ஒப்புக் கொண்டு, ஒரு விமர்சனம் எழுதி மெயிலில் அனுப்பி வைத்தார். முன்பொரு முறை, என்னை "வசூல் ராஜா MBBS" என்று குறிப்பிட்டு (நான் கௌசல்யாவின் மருத்துவக் கல்விக்கு வேண்டி, பதிவுலக நண்பர்களிடம் பொருளுதவி சேகரித்ததை முன் வைத்து!) டைமிங்காக, ஒரு காமெடிப் பதிவு போட்டிருந்தார். அவருக்கே உரிய பாணியில், இன்னும் சிலரையும் நக்கல் பண்ணியிருந்தார். வலைப்பதிவர்களிடம் அமோக ஆதரவைப் பெற்ற பதிவு அது :)))

அப்பதிவின் சுட்டியை, இட்லிவடையிடமே கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் !

தமிழ் வலையுலகில் இருக்கும் பல ஜாம்பவான்களை ஒப்பு நோக்கும்போது, நான் அப்படியொன்றும் பெரிதாக எழுதிக் கிழித்து விடவில்லை. 300 என்பது பெரிய சாதனையும் அல்ல ! இதை நான் அவையடக்கத்திற்காகச் சொல்லவில்லை என்பதையும் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன் ! என்னிடம் உள்ள 'சரக்கு'க்கு ஏற்ற வகையில், கடந்த 32 மாதங்களாக ஏதோ பதிந்து வந்திருக்கிறேன். இந்த நேரத்தில், இது வரை நான் எழுதியதில் ஒரு 20% (60 பதிவுகள்) 'நிச்சயம் தேறும்' என்று நம்புவதையும் சொல்லிக் கொள்கிறேன் :)


Over to இட்லிவடையார் ! சிவப்பில் இருப்பவை, என் இடைச்செருகல் !

************************
2007ம் வருட ராசிபலனில், "முகம் தெரியாத நண்பர்களிடம் அவஸ்தை" என்று போட்டிருந்தது. ஆனால் இவ்வளவு சீக்கிரம் அது பலிக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. பாலா 300வது பதிவு நான் தான் எழுத வேண்டும் என்று சொல்லிவிட்டர். அவர் தலையெழுத்து அப்படி என்றால் நான் என்ன செய்ய முடியும்? (400வது பதிவிற்காவது ஒரு நல்ல ஆளை(அல்லது அம்மணியைத்) தேர்ந்தெடுங்கள்.

(என் படத்தை, டோண்டு பதிவு ஒன்றிலிருந்து எடுத்து ஜிகினா வேலை செய்து, என்னை 'வசூல் ராஜா' வாக மாற்றிக் காட்டிய இட்லிவடை என்னை முகம் தெரியாத நண்பர் என்பது அநியாயாம்;-))

இப்போது கிரிக்கெட் போல் 100, 200, 300 என்று பதிவு வந்துவிட்டால் யாரையாவது கூப்பிட்டு, "என்னைப் பற்றி நல்லா நாலு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம்!" என்று கேட்பது ·பேஷனாகி விட்டது.

(நான் 'என் வலைப்பதிவை விமர்சனம் செய்யுங்கள்' என்று தான் கேட்டுக் கொண்டேன், நல்ல வார்த்தை (மட்டும்) சொல்லுங்க என்று கேட்கவில்லை!).

"பாலா பதிவுகளை நான் விரும்பிப் படிப்பேன். அவர் எடுத்துக் கொள்ளும் தலைப்புகள் எல்லாம்சூப்பர். அவருடைய ஆளுமை எளிமையானது. தமிழ் வலைப்பதிவுலகில் அவருக்கு என்று ஒரு தனி இடம்..." என்றெல்லாம் நான் பொய் சொல்லப் போவதில்லை.

(இதான் இட்லி வடை ஸ்டைல், 'சும்மா நச்சுன்னு இருக்கு':))

தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் நான் பார்க்கும் சமயம் "அதே கண்கள்" (மீனாவின் கண்கள்?) தெரிந்தால், த்ரில்லுக்காக க்ளிக் செய்து என்ன என்று பார்ப்பது வழக்கம்

(அதுக்குத் தானே என் ·போட்டோவைப் போடாம, 'மீனாக்கண்ணோட' கவர்ச்சியான கண்களை வச்சிருக்கேன்;-)).

பதிவுகள் அநேகமாக என்னை ஏமாற்றாமல் தான் இருக்கும் (தேங்க்ஸ்பா!).

முதல் முதலில் சிறுவயது சிந்தனைகள் என்று ஆரம்பித்து என்னைப் போல் சின்னப்பையன்களைக் கவர்ந்தார்

(மெட்ராஸ் பாஷையில, இத 'சந்தில பேந்தா உடறது'ன்னு சொல்லுவாங்க;-) சின்னப்பையனாமில்ல!).

செஸ் பற்றி ஒரு கதை எழுதியிருந்தார்; அது நினைவில் இருக்கிறது

(கலைமகள் போட்டியில பரிசு வாங்கின நம்ம கிரேட் எழுத்தாளர் உஷாவே, இந்த கதையை 'என்னோட மாஸ்டர்பீஸ்' என்று பாராட்டியிருந்தார்கள்!) .

'பல்லவியும் சரணமும்' என்ற பதிவுகளை எழுதி நிறைய மாமிக்களையும் மாமாக்களையும் வளைத்துக் கொண்டார். தற்போது அவை வருவதில்லை. அலுவலகத்தில் நிறைய வேலை என்று நினைக்கிறேன்.

(எதையும் overdo பண்ணினால், ஆர்வம் போயிடும், அப்பப்ப பிரேக் விடணும், இல்லையா ? அப்பதிவுகளில் பின்னூட்டமிட்ட பெண்கள் Jsri, உஷா, ஜெயஸ்ரீ, லதா, சந்திரா, சந்திரவதனா... ஆகியோர். நீங்க யார் யாரை மாமிகள் என்று சொல்ல வருகிறீர்கள் ? அப்பாடி, சிண்டு முடிஞ்சாச்சு:-)))

இப்போதெல்லாம் ஆழ்வார்கள், பாசுரங்கள் என்று "கேசவப்பழங்கள்" (சிவபழத்துக்கு ஆப்போஸிட்) தான் படிக்க முடியும் என்றாகி விட்டது. சங்கர், குமரன், கண்ணபிரான் மட்டுமே இந்தப் பதிவுகளைப் படிக்கிறார்கள் அல்லது பின்னூட்டம் போடுகிறார்கள்.

(இல்லை, வாசிப்பவர் பலர் உள்ளனர். பின்னூட்டங்களை வைத்து எடை போடாதீர்கள் ! சிலர் மெயில் போடுகிறார்கள். பிளாக் கவுண்டர் ஹிட்ஸ் கணிசமாக வருகிறது. தங்களுக்கு ஆழ்வார்கள் மற்றும் பிரபந்தப் பாசுரங்களின் மேல் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் நாத்திகராக இருக்கலாம் !!! அது உங்கள் இஷ்டம் !)

கிரிக்கெட் விளையாட்டில் நிறைய ஆர்வம் இருக்கும் பாலா, இந்த உலகக் கோப்பைக்கு கிரிக்கெட் பற்றிய பதிவுகள் நிறைய எழுதலாம். இவர் கைராசி, இந்தியா செமி·பைனல் போனாலும் போகலாம்.

(நிச்சயம் கவர் பண்ண முயற்சிக்கிறேன், நன்றி)

என்ன எழுதுவது என்று தெரியாத போது, "உள்ளேன் ஐயா!" என்று அட்டண்டன்ஸ் கொடுக்கும் ('அனானியிடமிருந்து கடிதங்கள்', 'படித்துவிட்டு முடிந்தால் சிரியுங்க' போன்ற பதிவுகளை) சின்னபுள்ளத்தனமான பதிவுகளைத் தவிர்த்து, தன் 'சின்னப்பசங்களை' பற்றி எழுதலாம்.(வாசிக்க:என் அம்முவும் குட்டி ராட்சசியும் !)

(ஒங்க ஆலோசனைக்கு நன்றி. ஆனால், கி.அ.அ.அனானி எழுதி அனுப்பிய சில 'விளாசல்' பதிவுகள் பதிய வேண்டியவை தான் என்பது என் கருத்து! அது போலவே, எனக்குப் பிடித்த, என்னை பாதித்த பல விஷயங்கள் பற்றியும் என் வலைப்பதிவில் பதிய வேண்டும் என்பது என் விருப்பம் ! எல்லாவற்றையும் பற்றி எழுதுவதால் தான், தேன்கூடு எனக்கு 'ஆல்ரவுண்டர்' அந்தஸ்து அளித்தது :))

தமிழ் வலைப்பதிவில் எல்லோரும் நம்மை படுத்திக்கொண்டு இருந்த போது, நிச்சயம் நல்லது செய்ய முடியும் என்று ஏழை மாணவிக்கு படிக்க உதவி செய்து எல்லோரையும் ஆச்சரிய படுத்தினார். தொடர்ந்து இது போன்ற சேவைகளைச் செய்துவருகிறார். சபாஷ் பாலா!

(நன்றி IV, வலைப்பதிவுலக நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும், ஒத்துழைப்பும் தான், இது போன்ற சமூகநலன் சார்ந்த முயற்சிகளில் என்னை தொடர்ந்து ஈடுபட வைத்து வருகிறது. இந்த நேரத்தில், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்)

பாலாவிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.இந்தப் பதிவிற்காவது முதல் பின்னூட்டமாக, "Test Comment " போடாமல் இருங்கள்

(நிச்சயம் போடுவேன், அது என் இஷ்டம், அதான் நான் உங்களிடம் கேட்ட என் வலைப்பதிவு பற்றிய விமர்சனத்தை எழுதி அனுப்பி விட்டீர்களே, இனிமேல் உங்க தயவு எனக்கு எதற்கு ? :) விமர்சனத்திற்கு நன்றி, இட்லிவடை!)

அன்புடன்,
இட்லிவடை

**********************

*** 301 ***

Thursday, February 22, 2007

300. உயிர் வாழ உதவி வேண்டி - 3

அன்பான நண்பர்களே,
சிரமம் பார்க்காமல் இந்தப் பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

சமீபத்தில் பதிவர் பொன்ஸ் (பூர்ணா) மருத்துவ உதவி கேட்டு வந்த ஒரு மின் மடலை எனக்கனுப்பி, குழந்தை லோகபிரியாவின் மருத்துவ உதவிக்கு (குழந்தை தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்று, நலம் பெற்று வருகிறாள்) வழங்கியது போக, மீதியுள்ள தொகையை (கிட்டத்தட்ட 22000) பிரியதர்ஷினி என்ற 3 வயதுக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு வழங்கலாமே என்று ஆலோசனை தந்திருந்தார்.

நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நேற்று அவரும், பதிவர் பாலபாரதியும் Dr. செரியன் ஹார்ட் ·பவுண்டேஷனில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பிரியதர்ஷினியின் பெற்றோரையும் சந்தித்து, விவரங்கள் கேட்டறிந்தனர். அவர்களுக்கு நன்றி. Disha Foundation என்ற தொண்டு நிறுவனம் உதவி செய்வதாக வாக்கு கொடுத்திருந்த போதிலும், சற்று அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில், குழந்தையின் தந்தை திரு.மூர்த்தி, மிகவும் அலைந்து, பலரிடம் கடனுதவி பெற்று (வீட்டையும் அடமானம் வைத்து) மருத்துவமனை முன் பணமாகக் கேட்ட 2 லட்சத்தை, 3 நாட்களுக்கு முன் கட்டி விட்டார்.

இன்று நான் மருத்துவமனைக்குச் சென்று, திரு.மூர்த்தியிடம் பேசினேன். அவர்கள் கோயமுத்தூர்காரர்கள். இந்த complicated சர்ஜரி செய்ய, அங்குள்ள (KG Hospital உள்ளிட்ட) பெரிய மருத்துவமனைகளும் இசையாததால், இவ்வளவு பணம் செலவழித்து, சென்னையில் (Dr.செரியன் போன்ற அனுபவம் வாய்ந்த நிபுணரிடம்) அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். திரு.மூர்த்தி ஒரு கம்பெனியில் செக்யூரிட்டியாக பணி புரிகிறார். சற்று சிரமமான குடும்பச் சூழல் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

மனிதர் (கோயமுத்தூருக்கே உரித்தான) நல்ல குணத்துடன் இருக்கிறார். ரூ 200000 புரட்ட தான் பட்ட சிரமங்களைக் கூட அவ்வளவாக பெரிதுபடுத்தவில்லை ! சென்னையில் தெரிந்தவர் / உறவினர் யாரும் இல்லாததால், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வேண்டிய நிலைமை.

குழந்தைக்கு இதயத்தில் ஒரு செயற்கை வால்வ் பொருத்த வேண்டியுள்ளது. அது தவிர, இதயத்தில் ஒரு ஓட்டையை அடைக்க வேண்டியுள்ளது. 5 மருத்துவர்கள் பங்கு கொள்ளும் அறுவை சிகிச்சை முடிய 8 மணி நேரம் ஆகும் என்று கேட்டறிந்தேன். இதயத்தில் கெட்ட இரத்தமும் நல்ல இரத்தமும் கலந்து விடுவதால், பிரியதர்ஷினியின் முகம் மற்றும் கைகள் சற்று நீலம் பாரித்திருந்தது. இம்மாதிரி பிரச்சினையால் பீடிக்கப்பட்ட குழந்தையை Blue Baby என்று கூறுவார்கள்.

இன்னும் ஒரு 55000-60000 தேவைப்படும் என்று கேள்விப்பட்டேன். லோகபிரியாவுக்காக நண்பர்கள் அனுப்பிய உதவித் தொகையில் ரூ.22000 கைவசம் உள்ளது. சென்ற உதவி முயற்சிகளில் பங்கு பெற விரும்பி இயலாத நண்பர்கள், இக்குழந்தையின் மருத்துவச் செலவுக்கு தங்களால் இயன்றதை தந்து உதவுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

உதவி செய்ய விரும்பும் நண்பர்கள், மடல் வழி தொடர்பு கொள்ளவும்.
poorna.rajaraman@gmail.com
balaji_ammu@yahoo.com
உதவுவதற்கான விவரங்களுக்கு, மேற்கூறிய இரண்டு முகவரிகளுக்கும் மடல் அனுப்பவும்.

Pons' posting: நீலக் குழந்தை..

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 300 ***

Friday, February 16, 2007

299. என் அம்முவும் குட்டி ராட்சசியும்

ரொம்ப நாளா எழுதணமுன்னு நெனச்சு, இப்பத் தான் எழுத முடிஞ்சது. ஏதோ, சின்னச் சின்ன விஷயங்களையும் பதிந்து வைக்க வேண்டும் என்று தோன்றியதன் விளைவே, சற்றே நீண்ட இப்பதிவு !

மூத்தவள் அம்மு (அதாங்க, என்னோட உரல் balaji_ammu.blogspot.com-ல இருக்கற பேரு) ரொம்ப சாத்வீகம், இயற்கையாகவே சாது (நம்ம வளர்ப்பு அப்படின்னு சொல்ல வரலீங்க!), சொன்னதைப் புரிந்து செயல்படுபவள் (உங்களை மாதிரி இல்லன்னு நீங்க சொல்ல வருவதும் புரியாமல் இல்லை:)) பிடிவாதம் என்பது மருந்துக்குக் கூட கிடையாது. பொறுமைசாலி. மென்மையான குணம். (மரபணு அறிவியலுக்கு அப்பாற்பட்டு சமயத்துலே இப்படி நடக்கறது உண்டுங்க!) இரண்டு வயதிலேயே ஸ்பஷ்டமான பேச்சு, மூன்றரை வயதில் அமலானாதி பிரான் (பிரபந்தம்) பாசுரங்களை மனப்பாடமாகச் சொல்வாள் ! அவளது நாலு வயதிலிருந்து, பள்ளியில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியுள்ளாள்.

இருவருமே (நான், மனைவி) வேலைக்குச் சென்றதால், பத்து மாதத்திலிருந்து, 6 வயது வரை, எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய பெண்மணி வீட்டில் விட வேண்டிய சூழல் ! முதலில் கொஞ்சம் கில்டியாகத் தான் இருந்தது. இது வேலைக்குப் போகும் எல்லா பெற்றோர்களுக்கும் பொருந்தும் தானே ! அம்முவோ, அந்த வீட்டிலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு, அவர்களின் அன்புக்கு பாத்திரமாகி விட்டாள். சின்னவளுக்கு அதிர்ஷ்டம் ஜாஸ்தி. வீட்டிலேயே ஒரு ஆளை வைத்து, அவளை பார்த்துக் கொள்ள முடிகிறது.


முதல் வகுப்பு படிக்கும்போது, ஒரு முறை, அம்மு சரோஜினி நாயுடுவாக வேடமிட்டு, நான் எழுதிக் கொடுத்ததை அருமையாகப் பேசி பரிசு வாங்கினாள். அவள் பேசியதை கணினியில் சேமித்து வைத்திருந்தேன். போறாத வேளை, அந்த ஹார்ட் டிஸ்க் மண்டையைப் போட்டு விட்டது :( படிப்பிலும் சுட்டி, அதனால் ஆசிரியைகளுக்கு பிடித்த மாணவியாக இன்று வரை (இப்போது வயது 10) திகழ்கிறாள். அதிர்ந்து பேசி அறியாதபோதும், அவள் தான் கடந்த இரண்டு வருடங்களாக வகுப்புத் தலைவி என்ற செய்தி கேட்டு சற்று ஆச்சரியம் ஏற்பட்டது !

மூத்தவள் பிறந்து, அதற்கடுத்த 5 வருடங்கள் என் வாழ்வின் வசந்தகாலம் என்று கூறுமளவுக்கு ஓர் அருமையான காலகட்டம் ! அப்போது வருடத்திற்கு மூன்று தடவை, ஏதாவது ஊருக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. மைசூர், பெங்களூர், மதுரை, கோவை, தஞ்சாவூர், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், முன்னார், கோடை என்று பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறோம். மிகவும் சந்தோஷமான நாட்கள் ! அதன் பின் ஐந்தாறு ஆண்டுகளே ஆகியிருப்பினும், என்னவோ ரொம்ப நாள் ஆன மாதிரி ஓர் உணர்வு !


சின்னவளை (மானு) அதே பள்ளியில் சேர்க்கச் சென்றபோது, மூத்தவளுக்கு LKG எடுத்த ஆசிரியை தன் வகுப்பிலேயே சின்னவளை சேர்த்துக் கொள்ள விரும்பி, அவ்வாறே நடந்தது. ஒரு இரண்டு மாதங்கள் கழித்து அவரைச் சந்தித்தேன். அவர், "மூத்தவள் போல இவளும் இருப்பாள் என்று நம்பி, இவளை என் வகுப்பில் சேர்த்துக் கொண்டதற்கு என்னை படாத பாடு படுத்துகிறாள்" என்றி சிரித்துக் கொண்டே கூறினார். அன்று ஆரம்பித்த புகார் இன்றும் தொடர்கிறது :)

ஒரு சமயம் காணாமல் போயிருக்க வேண்டியவள், இப்போது நினைத்தாலும் பகீர் என்கிறது ! வீட்டுக்கு அருகிலேயே உள்ள ஒரு சிறு பள்ளியில் மானுவை Pre-KGயில் சேர்த்திருந்தோம். மதியம், ஓர் ஆயா கூட்டி வருவதாக ஏற்பாடு. ஆயா வராவிட்டால், எனக்கோஎன் மனைவிக்கோ உடனே ·போன் செய்யுமாறும், யாரையாவது அனுப்பி குழந்தையை கூட்டிக் கொள்கிறோம் என்றும் தெளிவாக ஆசிரியையிடம் கூறியிருந்தேன். எப்போதும் எங்களிடம் முன்கூட்டியே தன் லீவு பற்றி செய்தி தரும் ஆயா, சொல்லாமல் கொள்ளாமல், ஒரு நாள் மானுவைக் கூட்டி வர பள்ளிக்குச் செல்லாதது, எங்கள் கெட்ட நேரம் தான் !

அந்த ஆசிரியை எங்களுக்கு ·போன் செய்யாமல், சிறிது நேரம் பார்த்து விட்டு, மானுவை விட 2 வருடங்கள் வயதில் பெரிய ஒரு சிறுவனிடம், சரியான வீட்டு முகவரியையும் தராமல், "மெயின் ரோட்டை க்ராஸ் பண்ணி, அப்படியே கொஞ்ச தூரம் போனால், ஒரு புது அடுக்கு மாடி குடியிருப்பு இருக்கும். அங்கே, விசாரிச்சு விட்டுடு" என்று கொஞ்சம் கூட பயமோ, பொறுப்போ இல்லாமல் அச்சிறுவனுடன் மானுவை அனுப்பி விட்டார். அவர் குறிப்பிட்ட திசையில் எங்கள் வீடு இல்லை என்பது தான் பிரச்சினையே !

இன்னும் குழந்தையைக் காணவில்லையே என்று என் தாயார் (அவருக்கு நடப்பதில் பிரச்சினை என்பதால் தான் ஆயா ஏற்பாடு) கவலையுடன், ஓட்டமும் நடையுமாக பள்ளிக்கு அருகே சென்றபோது, சற்று தொலைவில் மெயின் ரோடு நோக்கி சென்று கொண்டிருந்த குழந்தை மானு தான் என்று சீருடையை வைத்து அடையாளம் கண்டு கொண்டார். பதைபதைத்துப் போய், அவ்வழி சென்று கொண்டிருந்த ஒரு சைக்கிள்காரரின் உதவியுடன், மானுவை பிடித்து விட்டார். இருந்த படபடப்பில், பள்ளிக்குச் சென்று, ஆசிரியையை லெ·ப்ட் ரைட் வாங்கி விட்டார் ! ஆசிரியையும் தன் தவறை உணர்ந்து விட்டதால், அத்தோடு பிரச்சினை முடிந்தது.

கடவுள் அருளால் மானு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தாள். வாழ்க்கையில் இதுவும் ஒரு பாடம் ! அன்றிலிருந்து குழந்தைகள் விஷயத்தில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். என்னால் முடிந்தது, ஆயாவுக்கு ஒரு backup ஆளை ஏற்பாடு செய்து விட்டேன் :)

அம்முவும் சரி மானுவும் சரி, Pre-KG சென்ற முதல் நாட்களிலோ, LKG-க்காக பெரிய பள்ளி சென்ற முதல் நாட்களிலோ, துளியும் அழாமல் உற்சாகமாகச் சென்றதால், எங்களுக்கு எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் போனது ! என் இரண்டாவது மகளின் மழலை வாய்த் துடுக்கை சொல்லி மாளாது :)

1. ஒரு சமயம், என் மனைவியின் நகம் பட்டு என் கண்ணில் அடிபட்டபோது (அது குறித்து நான் எழுதிய பதிவு இங்கே!) அதற்கடுத்து ஒரு மூன்று மாதங்கள், வீட்டிலுள்ள அனைவரின் நகங்களையும் மானு அடிக்கடி பார்வையிட்டு, அவற்றை வெட்டி விடுமாறு அறிவுரை தந்த வண்ணம் இருந்தது நல்ல காமெடி :) வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் விட்டு வைக்கவில்லை என்பது விசேஷம் !

2. இன்னொரு அறிவுரை, நான் பைக்கில் ஏறிச் செல்லும்போதெல்லாம், என் அம்மா சொல்கிறார்களோ, இல்லையோ, மானு மறக்காமல், 'பத்திரமாக போய்ட்டு வாங்க, ஓவர்டேக் எல்லாம் பண்ணாதீங்க' என்று கூறுவது தான் !

3. இவளுடன் படிக்கும் ஒரு சிறுவன் ஒரு முறை இவளை அடித்து விட்டான். இவள் ஏதாவது அவனைச் சீண்டியிருப்பாள், அதைக் கூறவே மாட்டாள். தான் அடிபட்ட விஷயத்தை மட்டும் கூறி, பெரிய மனுஷி தோரணையில், "இத டீச்சர் கிட்ட வந்து, கம்ப்ளெயிண்ட் பண்ணாதீங்க, போனப் போறது' என்று டிராமா போடுவதில் வல்லவள் :)

4. பள்ளியில் தின்பதற்கு, நாங்கள் எவ்வளவு snacks கொடுத்து அனுப்பினாலும், மற்ற குழந்தைகள் எடுத்து வருவதை கேட்டுத் (பெரும்பாலும் பிடுங்கி) தின்பது தான் மானுவுக்கு மிகவும் பிடிக்கும் ! அதனால், அவள் பள்ளிக்குச் செல்வதற்கு முன், 'யாரோட snacks-ஐயும் எடுக்க மாட்டேன்' என்று சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டு தான் அவளை அனுப்புவது வழக்கம். இப்போது பரவாயில்லை !

5. என் மனைவி பணிக்குச் செல்லும்போது ஒரு தடவை லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு கிளம்பவே, அதைப் பார்த்த மானு, 'ஆபிஸ¤க்குத் தானே போறீங்க ? கல்லாணத்துக்கா போறீங்க ?' என்று ஓட்டவே, என் மனைவி, ஏதாவது விழாவுக்குப் போகும்போது லிப்ஸ்டிக் போடுவதைக் கூட விட்டு விட்டார் !

6. மானுவை யாராவது கண்டித்தால் அல்லது மிரட்டினால், வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன் என்று பாவ்லா காட்டுவாள் ! 'ஓடிப் போகக் கூட ஒனக்கு சரியா வழி தெரியாதே' என்றால், 'கார்ல ஏறி ரொம்ப தூரம் ஓடிப் போயிடுவேன்' என்று அவள் சீரியஸாக பதில் கூறுவதை ரசித்திருக்கிறோம் !

7. தொடர்ச்சியாக சில நாட்கள், நான் அலுவலகத்திலிருந்து சரியாக ஒன்பதரை மணிக்கு வீடு சேர்வதை கவனித்த மானு, "எப்டிப்பா, செல்வி (தொலைக்காட்சித் தொடர்) வரும்போது கரெக்டா வந்துடறீங்க? ஒங்களுக்கு ராதிகான்னா ரொம்ப இஷ்டமா?" என்று ஏடாகூடமாக எதோ கேட்க, என் மனைவி கொஞ்சம் கடுப்பானது என்னவோ உண்மை தான் ;-) அஸின், நமீதா என்று கூறாமல், 'சித்தி' ராதிகாவின் ரசிகனாக என்னை என் மகள் அடையாளப்படுத்தியதில் எனக்குக் கூட வருத்தம் தான் ;-) ஆனால், என் மனவருத்தத்தை என் மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலைமை ;-)

8. மூத்தவளை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து, மானு அவளை அடிப்பது சகஜமாக நடக்கும். மூத்தவள் திருப்பி அடிக்கவே மாட்டாள். ஒரு முறை ஸ்கேலால் சற்று ஓங்கி அடித்ததை நான் பார்த்து விட்டு முறைக்கவே, மானு அம்முவை நோக்கி, "நான் தான் ஏதோ கோவத்துலே அடிக்க வரேனே, கொஞ்சம் தள்ளிக்கோயேன், அடி படாதுல்ல!" என்று சமாளித்ததைக் கேட்டவுடன், என் கோபம் போய் விட்டது.

9. எல்லாத்தையும் விட சூப்பர் மேட்டர், "டாய்லெட்டுல எனக்கு வேத்துக் கொட்டுது, அங்க ஒரு ·பேன் வேணும்பா" என்று ஒரு முறை என்னிடம் வேண்டுகோள் வைத்தாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்:)

10. வார விடுமுறையில், நான் கணினியை ஆன் செய்தவுடன், "ஆரம்பிச்சுட்டீங்களா, ஒங்க பிளாக்கிங்க (blogging) ? இனிமே காதுல ஒண்ணும் விழாது" என்று பாட்டி மாதிரி குதர்க்கம் பேசுவாள் !

11. அம்முவைப் போல், பள்ளியில் நடக்கும் போட்டிகளில் மானு கலந்து கொள்வதில்லை என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பேன். ஒரு வழியாக, ஒரு முறை மாறுவேடப் போட்டி ஒன்றில், MS சுப்புலஷ்மியாக மேடையேறி, 'குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா' வை மழலையாகப் பாடி அசத்தி விட்டாள் ! அதைத் தொடர்ந்து, ஏதோ ஒரு குழு நடனத்திற்காக, மானுவை அவளது ஆசிரியை தேர்வு செய்து, தொடர்ந்து 3 சனிக்கிழமைகள் ரிகர்சலுக்குக் கூட்டி வருமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டார். நான் பள்ளிக்குக் கூட்டிப் போய் காத்திருந்து அழைத்து வர வேண்டியிருந்தது.

மூன்றாவது வாரம், மானுவை பைக்கில் (உடன் என் மனைவியும் வந்தார்) ரிகர்சலுக்குக் கூட்டிச் செல்லும்போது, என் மனைவியிடம், "இதுல எல்லாம் சேர்க்க வேணாம், யார் அலையரது இப்படி ரிகர்சலுக்கு?" என்று ஏதோ கடுப்பில் மெல்லக் கூற, உடனே மானுவிடமிருந்து, "அம்மா, நான் ஸ்கூல்ல நடக்கற competition-ல சேந்தா (சேர்ந்தால்) தான், என்னை எல்லாரும் நல்ல பொண்ணுன்னு கூப்பிடுவா, அப்டின்னு அப்பா தானே அடிக்கடி சொல்லுவாங்க" என்ற பதில் டாண் என்று வெளிப்பட்டவுடன், நான் சற்று ஆடிப் போய் விட்டேன் ! நான் அவ்வாறு அலுத்துக் கொண்டதின் தவறை உணர்ந்து, மானுவை சமாதானப்படுத்தும் விதமாக, "சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன் கண்ணு, இந்த மாதிரி எப்ப ரிகர்சல் வச்சாலும், அப்பாவே உன்னை கொண்டு விட்டு, கூட்டிண்டு வரேன், என்ன?" என்று கூறினேன். குழந்தைகளுக்குத் தான் எத்தனை உன்னிப்பாக கவனிக்கும் திறன் என்றும் எண்ணிக் கொண்டேன்.

எங்கள் வீட்டு சின்ன ராட்சசியைப் பற்றி சற்று நிறையவே சொல்லி உங்களை போரடித்து இருந்தால் மன்னிக்கவும் :) பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 299 ***

Tuesday, February 13, 2007

298. டோ ண்டு ராகவ அய்யங்கார் பிரச்சினை

***************************
இது பற்றி எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன் ! டோ ண்டு செய்ததில் என்ன
பெரிய தவறைக் கண்டீர்கள் ??? இன்னும் சிலர் செய்த அராஜகங்களை பட்டியலிட்டால்,
அவர்களின் கதி என்ன ? இப்பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்டுள்ள எண்ணிலடங்காப்
பதிவுகளை வாசித்ததில், நமது கருத்துக்களையும் (சிலருக்கு ஒவ்வாததாக இருப்பினும்)
வெளிப்படையாக தெரிவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்ற முடிவெடுத்து, இதை
எழுதுகிறேன் !
***************************
மேற்கூறியபடி எழுதி, இப்பிரச்சினை குறித்து நீட்டி முழக்குவேன் என்ற எதிர்பார்ப்புடன்
தாங்கள் வந்திருந்தால், தங்களுக்கு ஏமாற்றமே ! டோ ண்டுவின் 'முரளி மனோகர்' அவதாரம்
என்பது என்னளவில் காலணா பெறாத விஷயம், அதற்கு நேரம் செலவழிப்பதாக
எண்ணமில்லை :) 'டோ ண்டு' என்ற மந்திரச் சொல்லின் மகாத்மியம் அறியவே இப்பதிவு
;-) தாங்கள் மன உளைச்சல் அடைந்திருப்பின், மன்னிக்கவும் ! Sorry for the
disturbance, I am the "great escape" :)))

தலைமறைவாகி விட்ட
எ.அ.பாலா

பி.கு: இப்பதிவு இடுவதற்கு முன்னால், எனது பிளாக் கவுண்டர் எண்ணிக்கையை பார்த்து
வைத்திருக்கிறேன். ஒரு 8 மணி நேரம் கழித்து, எண்ணிக்கையை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன் !

வந்தது வந்தீர்கள் !
ஸ்ரீகாந்த் ஜிச்கர்
பற்றிய என் பதிவை வாசித்து விடுங்கள் ! You will appreciate it !

*** 298 ***

Sunday, February 11, 2007

திருவல்லிக்கேணியில் திருமங்கை - PTM3

பிருந்தாரண்ய ஷேத்திரம் என்று போற்றப்படும் பழமை வாய்ந்த, சிறப்பு மிக்க திருவல்லிகேணி
பார்த்தசாரதிப் பெருமாளை 10 பாசுரங்களில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, கண்ணன் இங்கு வந்ததாக நம்பிக்கை. உத்சவர் வேங்கடகிருஷ்ணனின் திருமுகத்தில், போரில் அம்பு பாய்ந்ததால் ஏற்பட்ட காயங்களின் தழும்புகளைக் காணலாம் !

இப்புண்ணியத் தலத்தில் 5 திவ்யதேசப் பெருமான்கள் எழுந்தருளியிருப்பதாகச் சொல்வது மரபு, அதாவது, தலப்பெருமாள் வேங்கடகிருஷ்ணன் திருப்பதி வேங்கட ரூபமாகவும், தனிச்சன்னதிகள் கொண்ட யோகா நரசிம்மர் அகோபில நரசிம்ம ரூபமாகவும், கோதண்ட ராமர் அயோத்தி ராமரூபமாகவும், கஜேந்திர வரதர் திருக்காஞ்சிப் பெருமாளின் ரூபமாகவும், ரங்கநாதர் ஸ்ரீரங்கத்து ரங்கமன்னாரின் ரூபமாகவும் கருதப்படுகின்றனர் !

Photobucket - Video and Image Hosting

மேற்கூறிய ஐவரில், வேங்கடகிருஷ்ணர், ஸ்ரீராமர், நரசிம்மர் மற்றும் கஜேந்திர வரதர் ஆகியோரைப் பற்றிய திருமங்கையின் திவ்யப் பாசுரங்களின் தொகுப்பு கீழே:

1068@..
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ*
செற்றவன் தன்னை புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)

நான்கடிகள் கொண்ட பாசுரத்தில் திருமங்கையார் எத்தனை தகவல்கள் தருகிறார், பாருங்கள் !

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் -
வில் விளையாட்டின் போது, தன்னை அழிக்க கம்சன் நடத்திய யாகத்தையும், கம்சனையும், மலையை ஒத்த பலம் வாய்ந்த அவனது மல்யுத்த வீரர்களையும்

வேழமும் பாகனும் வீழ* செற்றவன் தன்னை -
கம்சனினின் அரண்மனையின் வாயிலில், கண்ணனை மிதித்தழிக்கக் காத்திருந்த குவலயாபீடம் என்ற பெருயானையையும் அதன் பாகனையும் வீழ்த்தி அழித்த கண்ணபிரானும்

புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை* பற்றலர் -
திரிபுர அசுரர்களை தனது புன்னகையால் வீழ்த்திய சிவபெருமான், ஒரு சமயம், கோபத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுக்க, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதால், (திருமகளை அவ்வோட்டில் பிட்சை அளிக்க வைத்து) சிவன் அடைந்த துயரங்களிலிருந்து விமோசனம் அளித்த (திருக்கரம்பனூர்) உத்தமனும்

வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை -
மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் பக்கம் இருந்து, தன் திருக்கையில் சாட்டை ஏந்தி, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக களத்தில் முன் நின்று, தன் மார்பிலும் முகத்திலும் பகைவரின் அம்புகளை ஏற்று அர்ஜுனனைக் காத்த ஸ்ரீகிருஷ்ணனும்

சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* -
சிற்றன்னை கைகேயி இட்ட கட்டளைக்குப் பணிந்து, ராஜ்ஜியத்தையும், மணிமுடியையும் விருப்பத்துடன் துறந்த ஸ்ரீராமனும் ஆன ஒப்பில்லா எம்பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

*********************************
1073@
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்* அணியிழையைச் சென்று*
எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது* எம்பெருமான் அருள். என்ன*
சந்தமல் குழலாளலக்கண் நூற்றுவர்த்தம்* பெண்டிரும் எய்திநூல் இழப்ப*
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*


அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்* அணியிழையைச் சென்று* எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது* -
கண் பார்வையற்ற திருதாஷ்டரனின் மைந்தனும், துரியோதனினின் தம்பியுமான துச்சாதனன், பாஞ்சாலியிடம் சென்று, "உன் கணவரான பாண்டவர் சூதாட்டத்தில் உன்னை பணயம் வைத்துத் தோற்றதால், அடிமையான நீ எங்களுக்கு சேவகம் செய்ய வேண்டும்" என்று கூவியபடி அவளது சேலையைக் களைய முற்பட்டான்.

எம்பெருமான் அருள். என்ன* சந்தமல் குழலாளலக்கண் நூற்றுவர்த்தம்* பெண்டிரும் எய்திநூல் இழப்ப* -
அச்சமயத்தில், பாஞ்சாலி கைகள் இரண்டையும் உயர்த்தி, "கண்ணா ! என்னைக் காத்தருள்வாய்" என்று மனமுருகி வேண்டி ஸ்ரீகிருஷ்ணனிடம், கண்ணீர் மல்க, சரணடைந்தவுடன், அந்த ஆபத்பாந்தவன் தன் திருவருளால், துச்சாதனன் உருவ உருவ அவளது சேலையானது வளரும்படி செய்து, பாஞ்சாலியின் மானத்தைக் காத்தான். மகாபாரதப் போரில் கௌரவர் நூற்றுவரும் அழிந்து, அவரது மனைவியர் விதவைக் கோலம் பூண்டு, அதன் மூலம் பாஞ்சாலியின் சபதம் நிறைவேறுவதற்காக

இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* -
மகாபாரதப் போரில் இந்திரனின் புதல்வனான அர்ஜுனனின் தேரோட்டியாக நின்று, பாண்டவர்களை வெற்றி பெற வைத்து, தர்மத்தை நிலை நாட்டிய ஒப்பில்லா கண்ண பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

குறிப்பு: பாஞ்சாலி சரணாகதியைப் பற்றிப் பேசும்போது, அவள், "கண்ணா ! சங்கசக்ர கதாபாணே, த்வாரகா நிலைய அச்சுதா, கோவிந்தா, புண்டரீகாக்ஷா, ரக்ஷமாம் சரணாகதம்" என்று அவனை வேண்டிச் சரண் புகுந்தாள் !

*******************************
1074@
பரதனும் தம்பி சத்ருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
இரவும் நன்பகலும் துதிசெய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை*
குரவமே கமழும் குளிர்ப்பொழிலூடு* குயிலொடு மயில்கள் நின்றால*
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.


தம்பிமார்களான பரதனும், சத்ருகனனும், இலக்குவனும், துணைவியான சீதாபிராட்டியும் சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தி துதி செய்ய வேண்டி, அவர்கள் உடன் நின்ற ஸ்ரீராமனை, வலிமை வாய்ந்த இராவணனை வதம் செய்த ஒப்பில்லா எம்பெருமானை,

மணம் கமழும் மலர்கள் பூத்துக் குலுங்கும் குளிர்ச் சோலைகள் நிறைந்த, குயில்கள் பாட மயில்கள் தோகை விரித்தாடுகின்ற, சூரியனின் கதிர்கள் நுழைய வழியில்லாத வகையில் மரங்கள் அடர்ந்த, அழகிய திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

குறிப்பு: நாம் காணும் அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைந்த திருவல்லிக்கேணி ஆழ்வார் காலத்தில் சூரியக்கதிர்கள் புக வழியில்லா, அடர்ந்த மரங்கள் கொண்ட காடு போல இருந்திருக்கிறது ! ஆழ்வார் கொடுத்து வைத்தவர் :)))

***************************
1075@..
பள்ளியிலோதி வந்ததன் சிறுவன்* வாயில் ஓராயிர நாமம்*
ஒள்ளியவாகிப் போதஆங்கு அதனுக்கு* ஒன்றுமோர் பொறுப்பிலனாகி*
பிள்ளையைச்சீறி வெகுண்டு தூண்புடைப்பப்* பிறையெயிற்றனல் விழி பேழ்வாய்*
தெள்ளிய சிங்கமாகிய தேவைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2) 2.3.8


பள்ளியில் தான் கற்ற நாராயணனின் ஓராயிரம் நாமங்களை, தன் மழலை வாயால் பிரகலாதன் ஓதிய சமயத்தில், அவனது தந்தையான ஹிரண்யன் பொறுமை இழந்தவனாக, என்ன செய்வதென்று புரியாத கடும் சீற்றத்தில் தனது மகனை கடிந்து, "எங்கிருக்கிறான் உன் நாராயணன் ? இந்தத் தூணிலா ?" என்று கேட்டபடி, அருகில் இருந்த தூணை தன் கதாயுதத்தால் ஓங்கி அடித்தான் !

அடித்த மாத்திரத்தில், பிறை வடிவான கூரிய பற்களும், தீப்பொறி ஒத்த சிவந்த கண்களும், அகண்ட வாயும் கொண்ட சிங்கத் திருமுகத்தோடு அத்தூணிலிருந்து வெளிப்பட்டு, அவ்வரக்கனை தன் கூரிய நகங்களால் கிழித்து மாய்த்த, அழகிய சிங்கப்பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

குறிப்பு: நரசிங்க வடிவம் பார்க்க பயங்கரமாக இருப்பினும், சிங்கப்பெருமாள் அடியார்க்கு இனியவன், பேரருளாளன், அதனாலேயே ஆழ்வார் "தெள்ளிய" சிங்கமாகிய தேவன் என்கிறார் !

***************************
1076@
மீனமர் பொய்கைநாள் மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்றிழிந்த*
கானமர் வேழம் கையெடுத்தலறக்* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து* சென்று நின்று ஆழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மாமயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.9

பெருமாளின் மலர்ச்சேவைக்கு வேண்டி, மீன்கள் துள்ளி விளையாடும் தடாகத்திலிருந்து தினம் தாமரை மலர்களை பறித்து வந்த, காட்டில் உற்சாகமாக சுற்றித் திரியும், கஜேந்திரன் என்ற யானையின் காலை, ஒரு சமயம் முதலையொன்று கவ்வ, கஜேந்திரன் தன் தும்பிக்கையை உயர்த்தி, "ஆதிமூலமே" என்று பெருங்குரலெடுத்து அலற, விரைந்தோடி வந்த எம்பெருமான், தன் சக்ராயுதத்தை வீசி முதலையை அழித்து, யானையை துயரிலிருந்துக் காத்தான்.

அடியவர் துயர் தீர்க்கும் அப்பேர்ப்பட்ட வரதப்பெருமானை, தேன் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்த, மாடங்கள் மிகு மாமயிலைக்கு அருகில் உள்ள, திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

குறிப்பு: 'ஆழி தொட்டானை' என்பதற்கு 'யானைக்கு பாதிப்பு இல்லா வண்ணம், முதலை மட்டும் அழியும்படியாக திருச்சக்கரத்தை வீசிய எம்பெருமான்' என்று பொருள் கொள்க !!!

பாசுரச் சிறப்பு: முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார், தனது உபன்யாசத்தின் போது கஜேந்திரனைக் காக்க பெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபடக் கூறுவார் ! 'ஆதிமூலமே' என்ற அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில் பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக் கிளம்ப யத்தனித்தபோது, அவரது உத்தரீயம் (மேல் துணி) பிராட்டியின் கையில் சிக்கிக் கொள்ள, பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாக பறந்து வந்து (பெருமாள் கருடன் மேல் ஏறி பயணம் மேற்கொள்ள வேண்டி) அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறி பயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலது திருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, பகவான் அதிவிரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக, முக்கூரார் அழகாக பாசுர விளக்கம் கூறுவார் !

தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை ! அபயம் அளிப்பது ஒன்றே குறி ! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவான் ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்தி ஆறுதல் சொல்ல எப்படி ஒரு தந்தை அவசரமாக ஓடி வருவானோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பான்.

'கஜம்' என்பது யானையைக் குறிக்கும். கஜேந்திரனின் அலறலைக் கேட்ட மாத்திரத்தில், பெருமாள் விரைந்து வந்ததை, " 'க' என்றவுடன், 'ஜம்' என்று வந்து நிற்பான் எம்பெருமான் " என்று நகைச்சுவையாகக் கூறிக் கேட்டதுண்டு :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 297 ***

Saturday, February 10, 2007

Dr.ஸ்ரீகாந்த் ஜிச்கர் - ஓர் அசாதாரண அரசியல்வாதி !

ஜிச்கர், 1954-இல் மகாராட்டிர மாநிலத்தில், நாக்பூர் அருகே ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி மகனாகப் பிறந்தவர். 1980 முதல் 1992 வரை, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். இரு முறை மாநில அமைச்சராகவும் இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர். 1992 முதல் 1998 வரை ராஜ்ய சபா உறுப்பினராக, பல பாராளுமன்றக் குழுக்களில் சிறப்பாக பணி புரிந்தவர்.
Photobucket - Video and Image Hosting
இவரது தனிச்சிறப்பு, மருத்துவம், சட்டம், மேலாண்மை, ஜர்னலிசம் ஆகியவற்றில் பெற்ற உயர்கல்விப் பட்டங்கள் போக, 10 துறைகளில் முதுகலைப் பட்டமும் (MA in 10 subjects), சமஸ்கிருதத்தில் டாக்டர் பட்டமும் வாங்கியவர். எல்லாவற்றிலும் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருப்பது மற்றொரு சிறப்பு. இத்தனை பட்டங்களையும் பெற அவருக்கு மொத்தம் 18 (1972 - 90) வருடங்களே பிடித்தது. இந்த கால கட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் 84 தேர்வுகளை எதிர் கொண்டிருக்கிறார் ! கிட்டத்தட்ட 28 தங்கப் பதக்கங்களை படிக்கும் காலத்தில் வென்றிருக்கிறார் ! மொத்தம் 20 பட்டங்களை பெற்ற இவர், இந்தியாவிலேயே அதிகம் படித்த மனிதராக அறியப்படுகிறார்.

படித்துப் பட்டம் பெற்றதோடு நிற்காமல், 1978-இல் IPS தேர்விலும், 1980-இல் IAS தேர்விலும் வெற்றி பெற்றார். ஆனால், அரசியல் மேல் இருந்த நாட்டத்தால், 1980-இல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தனது 25-வது வயதில் (இந்தியாவிலேயே இளைய) சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

ஸ்ரீகாந்த் ஜிக்சர் நாக்பூரில் 1993-இல் நிறுவப்பட்ட காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் என்ற பெருமை பெற்றவரும் கூட. அதை நிறுவுவதற்கு இவர் அரும்பாடு பட்டிருக்கிறார். வருடந்தோறும், இவர் மத்திய பட்ஜெட் குறித்து ஆற்றும் உரையைக் கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வர். UNO, UNESCO போன்ற உலக நிறுவனங்களுக்குச் சென்று, இந்தியாவின் சார்பாக, பல குழுக்களுக்கு தலைமை தாங்கி அற்புதமான உரைகள் பல நிகழ்த்தியிருக்கிறார்.

புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 3 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது தனி நூலகத்தில் 52000 அரிய நூல்களை சேகரித்து வைத்திருக்கிறார் ! நாக்பூர் டைம்ஸ் மற்றும் நாக்பூர் பத்திரிகா வெளியிடும் நவசமாஜ் பத்திரிகை நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

சின்மயா யுவகேந்திராவின் முதல் தலைவராக இருந்து, நாடு முழுதும் பயணம் செய்து, பல கிளைகளை நிறுவி, சமூகத் தொண்டாற்றியிருக்கிறார். இந்துமதக் கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய தலைப்புகள் குறித்து உரையாற்றுவது இவருக்கு பிடித்தமான ஒன்று, பல உரைகள் நாடெங்கிலும் நிகழ்த்தியிருக்கிறார். குழந்தைகளையும், இளைஞர்களையும் ஊக்குவித்து, நல்வழி செலுத்துவதில் மிக்க ஈடுபாடு உடையவர்.

குரான், பைபிள், வேதங்கள் என்று மூன்றையும் பயின்று அறிஞராக அறியப்பட்டவர். ராமாயணம் மற்றும் மகாபாரதம் குறித்து, தனது 22-வது வயது முதலே, உரைகள் நிகழ்த்தி வந்துள்ளார்.பன்முகங்கள் கொண்ட ஓர் அசாதாரண மனிதர் இவர் திகழ்ந்தபோதும், மிக்க தன்னடக்கமும், அமைதியான சுபாவமும் கொண்டவர்.

ஒரு வகையான கொடிய புற்று நோயினால் 2000-இல் பீடிக்கப்பட்ட இவர், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று, ஒரு வருடத்தில் பூரண குணமடைந்தார். ஆனால், விதியின் கோர விளையாட்டைப் பாருங்கள் ! ஜூன் 2004-இல், நாக்பூருக்கு அருகே உள்ள கொந்தாலி என்ற இடத்தில் இவர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கார் ஒரு பேருந்துடன் மோதி ஏற்பட்ட கொடிய விபத்தில், தனது 49-வது வயதில் காலமானார்.

ஜூனியர் விவேகானந்தர் என்று கொண்டாடத்தகும் வகையில் வாழ்ந்து மறைந்த Dr.ஸ்ரீகாந்த் ஜிச்கரின் நினைவை போற்றுவதற்காக எழுதப்பட்டது இப்பதிவு. இந்த உன்னதமான மனிதரைப் பற்றி இங்கே வாசித்து விரிவாகத்தெரிந்து கொள்ளலாம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 296 ***

Friday, February 09, 2007

295. சொன்னதும் சொல்லாமல் விட்டதும் - 1

1 ) தி.க. தலைவர் வீரமணி

சொன்னது :
ஆனால் தி மு க அரசில் மூத்த அமைச்சராக இருக்கிற துரை முருகன் " முன்கூட்டியே எதையும் தெரிந்து கொள்கிற சக்தி படைத்தவர் பாபா .தன் சக்தியால் மோதிரம் வரவழைத்து எனக்கு தந்தார் என்பதுதான் நகைப்புக்கு இடம் தரக் கூடியது.மேஜிக் காட்சியை கடவுளின் அனுக்கிரகம் என்று சொல்வதை கலைஞரின் சர்க்காரில் அமைச்சராக இருக்கும் ஒருவரே பாராட்டுவது வேதனையாக இருக்கிறது

சொல்லாமல் விட்டது :
இதுக்கு பதிலா இவரும் பாபா காலிலேயே விழுந்திருக்கலாம்..வேட்டி தடுக்கி விழுந்துட்டாருன்னு சொல்லியாவது சமாளிச்சிருப்போம்

2 ) தமிழக அமைச்சர் துரை முருகன்

சொன்னது :
பாபா தனது சக்தியால் மோதிரம் வர வழைத்து எனக்கும் தயாநிதி மாறனுக்கும் மட்டும் தந்தார்

சொல்லாமல் விட்டது :
நல்ல வேளை...தயாநிதி மாறனுக்கும் தந்துட்டாரு..நா தனியா மாட்டியிருந்தா இதை வச்சே நம்ம அமைச்சர் பதவியை காலி பண்ணினாலும் பண்ணிருவாங்க.


3 ) முதலமைச்சர் கருணாநிதி

சொன்னது :
வானத்தை கிழித்து பொற்காசுகளை வாரி கொட்டிக் கொடுத்தாலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

சொல்லாமல் விட்டது :
எந்தெந்தக் கொள்கைகளை அப்படீன்னு யாரும் கேக்காத வரைக்கும் சரி.


4 ) பாக் அதிபர் முஷாரப்

சொன்னது:
காஷ்மீர் பிரச்சினைக்கு வன்முறை மூலமே தீர்வு காண முடியும் என நம்புகிரவர்களை எங்களுடன் சேர்க்க மாட்டோம்

சொல்லாமல் விட்டது :
அவங்க கையில துப்பாக்கியும், வெடிகுண்டும் குடுத்து இந்தியாவுக்குள்ள அனுப்பிருவோம்


இன்னும் இது போல நிறைய இருக்கு. Later :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 295 ***

Wednesday, February 07, 2007

294. வரம் தந்த பாபாவுக்கு பதமான லாலி !

தலைப்பு என்னுடையது. மேட்டர் கி.அ.அ. அனானியுடையது !

அனானி நண்பர் சூப்பர் ·பார்மில் இருக்கிறார் போல் உள்ளது :) இன்னும் 2 மேட்டர்களை மெயிலில் அனுப்பித் தாக்கியுள்ளார் ;) அவற்றைப் பிறகு பதிகிறேன்.

எப்போதும் போல், இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! என்சாய் !

******************
சப்பை மேட்டருக்கு இத்தனை சப்பைக்கட்டா ?

அல்லாரும் பேசி முடுச்சுட்டாங்க ..அதனால நாம ஆரம்பிக்கிறோம் அதாங்க முதல்வர் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபா கால்ல விழுந்த மேட்டரு.

எல்லாத்துக்கும் மொதல்ல ஒண்ணு சொல்லிப்போடணும் .....இதுல தப்பொண்ணும் இல்லீங்க...அது அவங்க இஷ்டம்

ஆனா வயசான காலத்துல ஏன் முதல்வர் இப்படி சப்பை கட்டு கட்டிக்கிட்டு இருக்காரு அப்படீன்னு ஒரு கேள்வியும் வருதுங்க

சப்பை கட்டு பார்ட்----1

அவர் நமக்கு நாமே திட்டத்தில் குடுக்குற கேள்வி பதில் அறிக்கையில் சொல்ரத கேளுங்க

" ஏன் மனைவி பக்தி மேலிட்டு காலில் விழவில்லை.வயதில் பெரியவர்கள் வந்தால் அவர்களை வணங்குவது என்ற மரியாதை காட்டும் மரபுதானே தவிர வேறில்லை "

அட்ரா சக்கைன்னானாம்...அப்பிடியே அவரோட இளவல் திராவிட தலைவர் வீரமணி சொல்லியிருக்கிறதை கேளுங்க

" தயாளு அம்மையார் பாபாவிடம் ஆசி வாங்கியதிலும் எங்களுக்கு உடன்பாடில்லை.ஏனென்றால் காலில் விழும் கலாசாரத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. "

பகுத்தறிவு விஷயமா வீரமணி சொல்றதை முதல்வர் ஏன் ஏத்துக்கணும் அல்லது கேட்கணும் அப்படீன்னு கேள்வி வர்ரது ஞாயம்தான்.

அதுக்கும் முதல்வரே "தெலுங்கு-கங்கை திட்டத்திற்காக ரூ.200 கோடி பாபா செலவழித்துள்ளார்.அதற்கு நன்றி சொல்லும் வகையில் நாங்கு முதல்வர்கள் பங்கேற்கும் விழாவில் நான் கலந்தி கொள்ளட்டுமா என்று வீரமணியிடம் கேட்டுக் கொண்டுதான் கலந்து கொண்டேன் " அப்படின்னு வீரமணியை " பகுத்தறிவு ரெபரன்ஸ் ஆப் தி வர்ல்ட்" ரேன்சுக்கு வச்சு பேசுனதுனால கேட்டோம். அம்புட்டுதான்

சப்பை கட்டு பார்ட்---2

மேலும் முதல்வர் சொன்னது

" 1948 ஆம் ஆண்டு எனக்கும் தயாளுவுக்கும் திருமணம் நடக்கும் போதே "திருமாகாளம்" கிராமத்தில் அந்தக் குடும்பத்தினர் தீவிர திராவிட கழகத்தில் இருந்தனர்.1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்தான் தயாளுவின் பாட்டி ராஜாமணியம்மாள்"

இதுலேர்ந்து என்ன சொல்ல வர்ராரு? அவங்க குடும்பமே திராவிட பாரம்பரியம் உள்ளது..அதுனால தயாளு அம்மாளும் அந்த பாரம்பரியம்தான் அதுனால அவங்க காலில் விழுந்தது பக்தியினால் இல்லை... மரியாதை நிமித்தமே அப்படீன்னா ?

ஆனா வீரமணி அய்யா சொல்ராருங்க " இருந்தாலும் தயாளு அம்மாள் கடவுள் நம்பிக்கையாளர்" ன்னுட்டு.

அட...அவுங்க பக்தியாளரா இல்லை பகுத்தறிவாளரா அல்லது பக்தி மிகுந்த பகுத்தறிவாளரா அப்படீன்னு சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க.

ஏன்னா இதை வச்சு தப்பு & தப்பில்லைன்னு "ஜோ"ரா "ஜல்லியடிச்சு "விடாது" க "லக்கி"ய கூட்டத்துக்கு கொஞ்சம் தெளிவு வருமுல்ல.
*******************

*** 294 ***

அரசியல் கூத்துகள் - 2

சமீப காலத்தில் வாசித்த செய்திகளைச் சார்ந்த சில கேலிக்கூத்துகள், உங்கள் பார்வைக்கு :)

'ராமர் சேது' கூத்து:பிஜேபி மற்றும் அதிமுக, சேது சமுத்திரம் கப்பல் பாதைத் திட்டத்தை, மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன. 'ராமர் கேது' என்றழைக்கப்படும், இராமரின் வானர சேனை கட்டிய புராதன பாலத்தின் தடங்கள் அழிந்து விடும் அபாயம் இருப்பதாகவும், அதை அழிப்பதை நாடு தழுவிய பிரச்சினை ஆக்கப் போவதாகவும் பிஜேபி கூறி வருகின்ற நிலையில், மத்திய அமைச்சர் பாலு, இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசிய நலனுக்கு எதிரானவர்கள் என்று கூறியிருப்பது நல்ல நகைச்சுவை :)

அவர் சார்ந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அந்நாள் தலைமை, மகாத்மா காந்தி 1942-இல் வெள்ளையருக்கு எதிராக 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தைத் தொடங்கியபோது, அயல்நாட்டவரின் ஆட்சிக்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றியது ! தேசிய நலனில் என்னே ஓர் அக்கறை !!!

'பாலாற்று அணை' கூத்து:இப்பிரச்சினையில் ஆளும் திமுகவின் 'வழவழா கொழகொழா' அணுகுமுறையினால், அக்கட்சி அதன் தோழமைக் கட்சிகளாலேயே (பாமக, இடதுசாரி, விசி) தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. பாமகவின் தலைவர் ஜிகே மணி அவர்கள் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், அவரு,ம் அவரது கட்சியினரும் அணை கட்டவிருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டபோது, அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி விட்டதை ஆந்திர அரசு தரப்பே ஒப்புக் கொண்டதாகக் கூறியுள்ளார் ! ஆனால், அமைச்சர் துரைமுருகனோ சட்டமன்றத்தில், அப்படியொன்றும் இல்லை என்கிறார் !

ஆந்திராவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி ! அதனால் தான் என்னவோ, தமிழக அரசு பேச்சை விடுத்து செயலில் இறங்குவதாகத் தெரியவில்லை. மாநிலத்தில் ஆட்சியையும், மத்திய அமைச்சரவையில் பங்கையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையா ?

'மாநகராட்சி மறுதேர்தல்' கூத்து:சென்னை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடுவது குறித்து, எதிர்க்கட்சியான அதிமுகவும், மதிமுகவும் குழப்பத்தில் உள்ளன. மறுதேர்தலை அக்கட்சிகள் புறக்கணிக்கும் பட்சத்தில், கேப்டனின் தேமுதிகவுக்கு வாய்ப்புகள் ஓரளவு பிரகாசமாகும்.

மறு தேர்தலில் பெருவெற்றி கிட்டினால் மட்டுமே, சென்ற முறை தேர்தலில் பெருவாரியாக முறைகேடு செய்து ஜெயிக்கவில்லை என்பதை, திமுக பொதுமக்களுக்கு நிரூபிக்க முடியும் என்றும், இத்தேர்தலுக்கு மீண்டும் பணம் செலவழிக்க வேண்டுமே என்றும், திமுகவின் கூட்டணிக்கு இரு பெருங்கவலைகள் உள்ளன.

அதே நேரம், அதிமுக தேர்தலை புறக்கணிப்பதில் கொண்டாட்டமே ! சமீபத்தில், சென்னை உயர்நீதி மன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநில தேர்தல் ஆணையர் பதவியில் தொடர்வதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்று, மாநில தேர்தல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலாற்றில் புது அணை கட்டுவதற்கான அறிவிப்பை மாநகராட்சித் தேர்தலுக்குப் பின் வெளியிடுமாறு ஆந்திர அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது !!!

எ.அ.பாலா

பி.கு: இன்னும் இரண்டு கூத்துகளைப் பற்றி (காவிரி ஆணையத்தின் தீர்ப்பு மற்றும் அமைச்சர் ஆற்காட்டாரின் உயர்நீதிமன்றத்தின் மீதான கடும் விமர்சனம்) நிறைய எழுதலாம் தான் ! இப்ப ரொம்ப அயற்சியாக இருப்பதால் அப்புறம் பார்க்கலாம் ! அதான் தினம், ஒரு கூத்து பற்றிய செய்தி வந்து கொண்டு தானே இருக்கிறது ;-)

*** 293 ***

Sunday, February 04, 2007

புஷ்பவனம் ஐயா - பர்ஸண்டேஜ் கதை

கொஞ்ச நாள் பிரேக் விட்டிருந்த கி.அ.அ. (கிராமத்து அரட்டை அரசியல்) அனானி சமீபத்தில் ஒரு மேட்டரை மெயிலில் அனுப்பி இவ்வாறு எழுதியிருந்தார்:
*********************
எ.அ.பாலா,

நலம் தானே. சமீபத்தில் நண்பர் ஒருவர் வலைப்பதிவில் கதை ஒன்றை வாசித்தேன். அட, இவர் கதை கூட எழுதுவாரா என்று ஆச்சரியம். நல்ல கருத்துள்ள கதை, நம்மளும் ஒரு கதையை எழுதலாமேன்னு ஒரு உந்துதலைத் தந்த கதை அது ;-) படிச்சுப் பார்த்துட்டு, உங்களுக்கு விருப்பமிருந்தா பதிவாப் போடுங்க.

குறிப்பிட்ட பதிவுக்குப் போய் நான் எழுதுனதை பின்னூட்டமா போடலாமுன்னா, அங்க சுத்திக்கிட்டு இருக்கற பின்னூட்ட ஜால்ராக்கள் போடற கூச்சலில், நம்ம குரல் எடுபடுமான்னு ஒரு சந்தேகம், அம்புடுதேன் :)

கி.அ.அ.அனானி

பி.கு: எந்தப் பதிவை நான் குறிப்பிடுகிறேன் என்று முதலில் கண்டுபிடிப்பவரின் சொந்தக்காரப் புள்ளைக்கு பாலா 'பேமண்ட்' சீட் ஒன்றை தள்ளுபடி ரேட்டில் வாங்கித் தருவார் ;-)
***************************
கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்கிருக்கு அசைக்க முடியாத நம்பிக்கையாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :)

இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! கி.அ.அ.அ கதை பதிவாக கீழே !

எ.அ.பாலா

**********************

"அப்பா...நான் நல்ல மார்க் எடுத்து பாஸாயிட்டம்பா...இஞ்சினீரிங் காலேசுல சீட்டு, ஸ்காலர்ஷிப்பு அல்லாம் கெடைச்சுரும்பா..நான்தாம்பா ஸ்கூல் பஸ்ட்டு " என்றபடி வந்தான் சின்ராசு

மென்று கொண்டிருந்த வெற்றிலையை இடப்பக்கம் திரும்பி புளிச்சென்று துப்பி விட்டு " சரி..அதுலென்ன..ஒனக்குதான் பாஸ் பண்ணிப் போட்டாலே சீட்டு வாங்கிருவமுல்ல " என்று வெறுமனே சொன்னார், கூடத்தில் இருந்த பெரிய தேக்கு மர ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த பஞ்சாயத்து போர்டு பிரசிடென்டு புஷ்பவனம் ஐயா.

அப்பாவிடம் சிறிதளவேனும் பாராட்டை எதிர்பார்த்து வந்த சின்ராசுவின் முகம் கருத்தது.

தலையைக் குனிந்து கொண்டே வீட்டினுள் சென்றான்

பின்னால் கணக்கு ஆவுடையா பிள்ளை " என்னங்க பள்ளிக்கூடத்திலயே சாஸ்தி மார்க் தம்பிதான் வாங்கியிருக்குதாமுல்ல " என்று சொல்வது கேட்டதும் அப்பா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேட்கும் ஆவலில் சின்ராசுவின் நடை மட்டுப் பட்டது.

"மார்க் கெடக்குது களுதை...அதை வச்சுக்கிட்டு நாக்கா வளிக்க....அவனவன் 95 பர்ஸன்டு மார்க் வாங்கிட்டு இஞ்சினீரிங் சீட்டு கெடக்காம ...பேமண்டு சீட்டு வாங்க காசுமில்லாம வக்குமில்லாம பொளப்புக்காக கல்யாணம் கருமாதின்னு சடங்கு செஞ்சு வச்சு வயத்தை களுவிட்டிருக்கானுங்க...சுத்துப்பக்கத்துலே பார்க்குரீங்கல்ல...ஏன்..ஒம்ம பையன் கூடத்தான் போன வருசம் 96 பர்சண்டு மார்க்கு வாங்கி இதே ஸ்கூலுல மொதலாவதா வந்து மெடலு வாங்கினான்...இப்ப என்ன கிளிக்காங்குறேன்...மேல காலேஜு சீட்டு கெடைக்காம தீப்பட்டி ஆபிஸ¤ல 500 ரூவா சம்பளத்துக்கு கணக்குதான எளுதிக்கிட்டு இருக்கான்..டெய்லி தீப்பட்டி ஆபீஸ¤க்கு கணக்கெளுதப் போகும் போது வாங்குன மெடலை களுத்துல மாட்டிக்கிட்டு போறானா ? என்று இதழோரம் நையாண்டிப் புன்னகையுடன் கேட்டார்.

" இஞ்சினியரிங் காலேஜுல சேர இப்பத் தேவை "இந்த" பர்ஸண்டேஜும்..மெடலும் இல்ல... ..அதைப் புரிஞ்சுக்கோரும்.."என்றார் மீண்டும் புகையிலையை சாவகாசமாக வாயிலிட்டு அதக்கிய படி.

கேட்டுக் கொண்டிருந்த ஆவுடையா பிள்ளை மெளனமாய் தலையை குனிந்து கணக்கெழுதத் தொடங்கினார்.

*** 292 ***

Saturday, February 03, 2007

வைணவம் சார்ந்த எனது பதிவுகள் - A ready reckoner

ஆழ்வார்கள், திவ்யப்பிரபந்தம் மற்றும் வைணவ திவ்யதேசங்கள் பற்றி நான் இதுவரை எழுதியுள்ள பதிவுகளின் உரல்களை, அப்பதிவுகளை வாசிக்க விருப்பமுள்ள நண்பர்களின் வசதிக்காக, கீழே தொகுத்து அளித்திருக்கிறேன். இனி மேல் (அவ்வப்பொழுது) எழுதவிருக்கும், வைணவம் குறித்த, பதிவுகளின் சுட்டிகளையும் இப்பதிவில் சேர்க்கலாம் என்று உத்தேசம்.

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரங்கள் - 2

திருப்பாவை விளக்கப் பதிவுகளின் உரல்கள்:

http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv30-ii.html

http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv30.html

http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv29.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv28.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv27.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv26.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv25.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv24.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv23.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv16.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv6.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv5.html

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரங்கள் - 1

திருக்கூடலூர் திவ்யதேசம்

நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் - 1

திருக்கண்டியூர் திவ்யதேசம்

திருப்பேர் நகர் திவ்யதேசம்

திருவன்பில் திவ்யதேசம்

திருவெள்ளறை திவ்யதேசம்

நம்மாழ்வார்

திருக்கரம்பனூர் திவ்யதேசம்

திருப்பாணாழ்வார்

திருக்கோழி திவ்யதேசம்

ஆழ்வார் பாசுரங்களில் பக்திரஸம் - 3

ஆழ்வார் பாசுரங்களில் பக்திரஸம் - 2

ஆழ்வார் பாசுரங்களில் பக்திரஸம் - பொருளுரை

ஆழ்வார் பாசுரங்களில் பக்திரஸம்

மழைப்பாசுரங்கள்

என்றென்றும் அன்புடன்
பாலா

***291***

பெரிய திருமொழிப் பாசுரங்கள் தொகுப்பு - PTM2

Photobucket - Video and Image Hosting

உலவுதிரையும் குலவரையும்* ஊழிமுதலா எண்திக்கும்*
நிலவும்சுடரும் இருளுமாய் நின்றான்* வென்றிவிறலாழி வலவன்*
வானோர் தம்பெருமான்* மருவாவரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*
சலம்சூழ்ந்தழகாய* சாளக்கிராமம் அடைநெஞ்சே. 1.5.3

திருமங்கையாழ்வார் 'சகலமும் பரந்தாமனே' என்கிறார் இப்பாசுரத்தில் !

அலைகடல்களிலும், பெருமலைகளிலும், காலத்திலும், எண்திசைகளிலும், நிலவிலும், சூரியனிலும்,
இருளிலும், இவ்வாறாக எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக உறைந்து நிற்பவனும், பகைவரை வெற்றி கொள்ள தன் திருக்கைகளில் திருச்சக்கரத்தையும், சங்கையும் ஏந்தியவனும், வானவர்களின் தலைவனான தேவாதி தேவனும், கொடுஞ்செயல் புரியும் அசுரர்க்கு எப்போதும் எதிரியாக இருப்பவனும் ஆன பரந்தாமன் புண்ணிய நீர் சூழ்ந்த, அழகான சாளக்கிராமத்தில் எழுந்தருளி உள்ளான் ! அவ்விடம் அடைந்து அப்பரமனை பற்றிடு என் நெஞ்சமே !

****************************
சூதினைப்பெருக்கிக் களவினைத் துணிந்து* சுரிகுழல் மடந்தையர்திறத்து*
காதலேமிகுத்துக்கண்டவா* திரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்*
வேதனைக்கு ஒடுங்கிநடுங்கினேன்* வேலைவெண்திரை அலமரக்கடைந்த நாதனே*
வந்துஉன் திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.3

தனது கடந்த கால வாழ்க்கையை எண்ணி மிக்க துயரம் கொள்கிறார், இப்பாசுரத்தில் !

ஆகாத தந்திரங்களைக் கைகொண்டு, களவுத் தொழில் செய்து, அழகிய கூந்தல் கொண்ட பெண்டிர் பின் (சிற்றின்பம் வேண்டி) அலைந்து, பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நான், செய்த தீவினைகளின் பலனாக, நரகத்தில் யமதூதர்கள் எனக்குச் செய்யவிருக்கும் கொடிய வேதனைகளை எண்ணி ஒடுங்கி நடுங்கினேன் !

திருப்பாற்கடல் கடைந்த எம்பெருமானே, நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கும் என் தந்தையே, உன் திருவடிகளே காப்பு என்று உன்னைச் சரணடைந்தேனே !

************************
பள்ளியாவது பாற்கடல்அரங்கம்* இரங்கவன்பேய்முலை*
பிள்ளையாய்உயிருண்ட எந்தை* பிரானவன் பெருகுமிடம்*
வெள்ளியான் கரியான்* மணிநிறவண்ணன் என்றெண்ணி*
நாடொறும் தெள்ளியார்வணங்கும்மலை* திருவேங்கடம் அடைநெஞ்சமே. 1.8.2

இப்பாசுரத்தில் திருமங்கை மன்னனின் பக்திப் பேருவகை பிரவாகமாய் வெளிப்பட்டுள்ளது !

திருவரங்கத்திலும் திருப்பாற்கடலிலும் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவனும், ஆயர்பாடியில் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில், தன்னைக் கொல்ல கம்சன் அனுப்பிய பூதனை என்ற அரக்கியின் நச்சு முலையில் பால் குடித்து அவளது உயிர் குடித்தவனும் ஆன எம்பெருமான் திருவேங்கடத்தில் வியாபித்து நிற்கிறான் ! "பிரகாசமானவனே, அழகான கருமேனி கொண்டவனே, நீலமணி நிறத்துடைய அழகனே" என்று ஞானத்தெளிவு பெற்ற அடியவர், நாளெல்லாம போற்றி வணங்கும் அவ்வெம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடமலை அடைந்து அவன் திருவடிகளை பற்றிடு என் நெஞ்சமே !

************************
குலந்தானெத்தனையும்* பிறந்தே இறந்தெய்த்தொழிந்தேன்*
நலந்தான்ஒன்றுமிலேன்* நல்லதோர்அறம்செய்துமிலேன்*
நிலம்தோய் நீள்முகில்சேர்* நெறியார் திருவேங்கடவா.*
அலந்தேன் வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே. 1.9.4

இனி ஓர் பிறப்பு இல்லாவண்ணம் தன்னை ஆட்கொள்ளுமாறு பரமனை வேண்டுகிறார், இப்பாசுரத்தில் !

இப்பிறப்புக்கு முன், மனிதன், விலங்கு, பறவை என்று பலவகையான பிறப்புகள் நான் எடுத்து, வாழ்ந்து மரித்திருக்கிறேன். அப்பிறப்புகளிலெல்லாம் நல்வினைகள் ஏதும் நான் செய்ததில்லை ! பெரிய கருமேகங்கள் நிலத்தில் தவழ்ந்து ஓய்வெடுக்கும் திருவேங்கட மலையில் வாழும் பிரானே !

பல துயரங்களையும் வேதனைகளையும் அனுபவித்து, அலைந்து திரிந்து, நின்னையே கதியென்று உன் திருவடி நாடி வந்துள்ளேன், என்னை ஆட்கொண்டு அருள்வாயாக !

***********************
பற்றேல் ஒன்றுமிலேன்* பாவமேசெய்து பாவியானேன்*
மற்றேல் ஒன்றரியேன்* மாயனே. எங்கள்மாதவனே.*
கல்தேன் பாய்ந்தொழுகும்* கமலச்சுனை வேங்கடவா.,
அற்றேன் வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே. 1.9.9

பரந்தாமனை விட்டால், தனக்கு வேறு கதியில்லை என்கிறார் , இப்பாசுரத்தில் !

உன் திருவடியையைப் பற்றுவது விடுத்து எனக்கு வேறு மார்க்கமில்லை ! நான் பாவம் மேல் பாவம் பல செய்து பாவியானவன். உன்னைத் தவிர புகல் மற்றொன்று நான் அறியேன் ! உணர்வதற்கரிய மாயவனே ! திருமகளின் மணாளனான எங்கள் மாதவனே !

மலையின் உயரங்களிலிருந்து உருண்டோடி வரும் தேன் கலந்ததால் சுவை கூடிய நீர் நிரம்பிய, தாமரை பூத்த தடாகங்கள் நிறைந்த திருவேங்கடமலை வாழ் எம்பெருமானே ! உன் திருவடிகள் மட்டுமே காப்பு என்று உன்னிடம் சரணடைந்த என்னை ஏற்று எனக்கருள்வாயாக !
*******************************************

1064@
திங்களப்பு வானெரிகாலாகி* திசைமுகனார்*
தங்களப்பன் சாமியப்பன்* பாகத்திருந்த *
வண்டுண் தொங்கலப்பு நீண்முடியான்* சூழ்கழல் சூடநின்ற*
எங்களப்பன் எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே* 2.2.7

சந்திரன், பஞ்சபூதங்கள் ஆகியவற்றில் அந்தர்யாமியாகத் திகழ்பவனும், பிரம்மனின் தந்தையும், சாமவேத நாயகனும் ஆவான் எங்கள் எம்பெருமான் ! த்ரிவிக்ரமனாக, தன் திருவடிகளால் எம்பெருமான் அண்டத்தை அளந்த காலத்தில், அவனது திருவடிகளில் பிரம்மன் இட்ட நீரானது, புனித கங்கை நதியாக பெருக்கெடுக்க, சிவபெருமான் அவளை (கங்கை) தன் சடைமுடியில் ஏற்றுக் கொண்டான் ! அப்பேர்ப்பட்ட என் தந்தை, ஒப்பில்லா என் பெருமான், திருவள்ளூரில் சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறான் !

****************************
1065@
முனிவன் மூர்த்தி மூவராகி* வேதம் விரித்துரைத்த புனிதன்*
பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*
தனியன் சேயன் தானொருவனாகிலும்* தன்னடியார்க்கு இனியன் *
எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே. 2.2.8

இப்பாசுரத்தில், திருமங்கை மன்னன், பக்திப் பேருவகையில், பெருமாளை எப்படி வியந்து போற்றிப் பாடியிருக்கிறார் என்று பாருங்கள் !!! இதற்கு பொருள் என்று ஒன்றை எழுதுவது தேவையில்லை என்றாலும், ஏதோ எழுதியிருக்கிறேன் !

பிரம்மனையும், சிவனையும் படைத்து மூவர் ஆனவனும், வேதத்தின் சாரத்தை பகவத்கீதையாக உபதேசித்த ஸ்ரீகிருஷ்ணனும், காயாமலர் நிறங்கொண்ட என் அண்ணலும், தர்மத்தின் நாயகனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனும், விளக்கத்திற்கு அப்பாற்பட்டவனும், உணர்வதற்கரிய பரம்பொருளும், ஒப்பாரில் சுவாமியும், ஆக இருந்தும், தன் அடியார்களுக்கு இனியவனும், எளியவனும் ஆன என்னப்பன், எம்பெருமான், திருவள்ளூரில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் ஆட்சி புரிகிறான் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 290 ***

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails